
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-1-பினாங்குத் தீவையும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பூலாவ் ஜெரஜாக்’ (Pulau Jerejak) தீவையும் இணைக்கும் வகையில், 500 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் அமைக்கப்படும் புதியப் பாலம், 2029-ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டிற்குள் நிறைவடையும்.
கட்டமைப்பு வசதிகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்
Zairil Khir Johari அதனை அறிவித்துள்ளார்.
தனியார் துறைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இந்தப் பாலம், பூலாவ் ஜெரஜாக் தீவுக்கான முதல் நிரந்தர சாலை இணைப்பாக அமையும்.
1 கிலோ மீட்டர் நீளமுள்ள பாலத்தையும் 4 கிலோ மீட்டர் இணைப்புச் சாலைகளையும் கொண்ட இத்திட்டத்தில், இரு வழிகளிலும் தலா இரண்டு பாதைகளுடன் பாதசாரிகள் மற்றும் சைக்கிள்களுக்கான தனிப் பாதைகளும் அமைக்கப்படுகின்றன.
Tropical Island Resort நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் இத்திட்டம், தீவில் அமையவுள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாக மேம்பாடுகளுக்கு முக்கிய தூணாக இருக்கும்.
2025 மே மாதம் தொடங்கிய இதன் முதற்கட்ட பணிகள், வரும் 2029 ஜூலை 31-க்குள் முழுமையடையும் என Zhairil சொன்னார்.
இதுவரை படகுப் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருந்த பூலாவ் ஜெரஜாக் தீவுக்கு, இந்தப் பாலம் ஒரு புதிய பொருளாதார மற்றும் சுற்றுலா கதவைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



