புத்ராஜெயா, ஜனவரி-8, மக்களுக்கான அரசாங்கச் சேவையளிப்பை மேலும் எளிதாக்கும் வகையில், Kiosk Sentuhan MADANI எனும் புதிய முன்னெடுப்பு இன்று புத்ராஜெயா Alamanda பேரங்காடியில் அறிமும் காண்கிறது.
கணிப் பொறியகம் எனப்படும் இந்த kiosk இயந்திரங்கள் வாயிலாக ஒரே இடத்தில் 90-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படும்.
அலுவலக நேரத்திற்கு வெளியேயும் மக்களுக்கு அரசாங்கச் சேவைகள் கிடைக்கும் பொருட்டு, பேரங்காடிகள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமுள்ள 38 இடங்களில் இந்த kiosk இயந்திரங்கள் நிறுவப்படும்.
தொடக்கக் கட்டமாக சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ, Pos Malaysia, மலேசிய நிறுவன ஆணையமான SSM, TNB, ஊழியர் சேமநிதி வாரியமான EPF, மற்றும் MyDigital ID ஆகிய 6 அரசு நிறுவனங்கள் இந்த kiosk திட்டத்தில் பங்கேற்கின்றன.
2025 வரவு செலவு அறிக்கையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சிந்தனையில் உதித்த திட்டம் இதுவென, பிரதமர் துறையின் மடானி கண்காணிப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் Mohd Khalid Mohamed Latiff தெரிவித்தார்.
அதை சீக்கிரமே அமுல்படுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டதால், ஆண்டுத் தொடக்கத்திலேயே அத்திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணிக்கு டத்தோ ஸ்ரீ அன்வார் இந்த Kiosk Sentuhan MADANI திட்டத்தை அறிமும் செய்து வைக்கிறார்.