கோலாலம்பூர், ஏப்ரல் 1 – மலேசியாவில் ஹைட்ரஜனில் இயங்கும் கார் தொழில்நுட்பம் தற்போது தயாராகிவிட்டதாக, அறிவியல் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லிஹ் காங் தெரிவித்தார்.
அதன் வாயிலாக, 2030-ஆம் ஆண்டுக்குள், மலேசியாவின் பொருளாதாரம், சுற்றுசூழலுக்கு பாதகத்தை ஏற்படுத்தாத ஹைட்ரஜன் ஏற்றுமதியில் இருந்து, ஆயிரத்து 200 கோடி ரிங்கிட் வரையில் வருமானத்தை ஈட்ட முடியுமென, தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினருமான சாங் சொன்னார்.
அதனால், நாட்டில் பயன்பாட்டுக்கு தயாராக இருக்கும் ஹைட்ரஜன் தொழில்நுட்ப வளங்கள் தயாராக உள்ளன. அதற்கு ஏற்ற தேவையையும், உற்பத்தியையும் உருவாக்க வேண்டியது அவசியம் என சாங் குறிப்பிட்டார்.
ஹைட்ரஜனில் இயங்கும் கார்கள் அல்லது ஹைட்ரஜன் எரிபொருள் செல் மின்சார வாகனங்கள், குறைந்த எரிபொருள் நிரப்பும் நேரத்தை கொண்டுள்ளன.
குறிப்பாக, மூன்று முதல் ஐந்து நிமிடங்களில் எரிப்பொருளை நிரப்பிவிடலாம் என்பதோடு, அதனை கொண்டு 700 முதல் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும்.
2050-ஆம் ஆண்டுக்குள், மலேசியா நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இலக்கை அடைய இந்த ஹைட்ரஜன் கார் தொழில்நுட்பம் சிறந்த தீர்வாக அமையுமெனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.