கோலாலம்பூர், நவ 4 – பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமிக்கு எதிராக போடப்பட்ட அவதூறு வழக்கில் தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததைத் தொடர்ந்து, ராமசாமி கொடுக்கவுள்ள 1.52 மில்லியன் நஷ்டஈட்டு தொகையைப் பாலஸ்தீன மக்களுக்கு நன்கொடையாக வழங்கவிருப்பதாக கூறியுள்ளார் இஸ்லாமிய சமய போதகர் ஸாக்கிர் நாயக்.
முகநூலில் தான் இந்த வழக்கில் வென்றதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ள அவர், இந்த பணத்தை தாம் நன்கொடையாக வழங்கவிருப்பதையும் அறிவித்துள்ளார்.
மலேசிய இந்துக்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குத்தான் அதிக விசுவாசமாக இருக்கிறார்கள் உட்பட சில சர்ச்சையான விஷயங்களை பேசியிருந்தைத் தொடர்ந்து, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேராசிரியர் ராமசாமி கட்டுரைகளை வெளியிட்டிருந்தார்.
அதில் தன் மீது அவதூறு சுமத்தப்பட்டிருப்பதாக கூறி ராமசாமி மீது ஸாக்கிர் நாய்க் போட்ட வழக்கில் நேற்று முன்தினம் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனிடையே, இந்த நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்க பொதுமக்களின் உதவியை நாடிய ராமசாமிக்கு நேற்று இரவு வரை 2 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான ரொக்கம் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.