கோலாலம்பூர், டிசம்பர் 15 – இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இலவச விசா பயணம் தொடர்பான அண்மைய அறிவிப்பை தொடர்ந்து ஏர் ஆசியா, இந்தியா மற்றும் மலேசியாவிற்கான சிறப்பு சலுகையுடன் விமானச் சேவையை அறிவித்துள்ளது.
இதன்வழி, 2024ஆம் ஆண்டில் வாரத்திற்கு 1.5 மில்லியன் இருக்கைகள் கொண்ட 69 விமானச் சேவைகளை ஏர் ஏசியா வழங்கவுள்ளது.
மலேசியாவிலிருந்து சென்னை, திருச்சிராப்பள்ளி, கொச்சின், ஹைதராபாத், பெங்களூரு, கல்கத்தா மற்றும் விரைவில் திருவானந்தபுரம் ஆகிய நகர்களுக்குப் பயணிக்க ஒரு வழிப் பயணத்திற்கான டிக்கெட்டை RM189 ரிங்கிட்டுக்கு ஏர் ஏசியாவில் பெற்றுக் கொள்ளலாம்.
அதேபோல் மலேசியாவைச் சுற்றிப் பார்க்க வரும் இந்திய சுற்றுப்பயணிகள் 4,499 இந்திய ரூபாயில் கோலாலம்பூருக்கு நேரடியாக பயணித்து மலேசியாவில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்க்கலாம்.
இந்த சிறப்பு சலுகைக்கான பயணக் காலம் உடனடியாக தொடங்கி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடைகிறது.
ஏர் ஏசியாவுடன் சேர்ந்து மலேசியாவிற்கான துணை இந்தியத் தூதர் சுபாஷி நாராயணன் உடன் இணைந்து இந்த அறிவிப்பை செய்தனர்.
அறிவிக்கப்பட்ட விசா விலக்கு, உள்நாட்டுச் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்தும் தூண்டுகோலாக அமையும் என மலேசிய ஏர் ஏசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி ரியாட் அஸ்மாட் நம்பிக்கை தெரிவித்தார்.