
கோலாலம்பூர் – மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை சிறுவயதிலிருந்தே ஊக்குவிக்கும் நோக்கில், ‘நித்திரைக் கதைகள்’ எனும் தொகுப்பு நூல் கோலாலம்பூர் தேசிய நூலக அரங்கில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
முழுக்க முழுக்க மலேசிய எழுத்தாளர்களின் பங்களிப்பில் உருவான இந்நூலில், நற்பண்புகள், சூப்பர் ஹீரோக்கள், மேஜிக், செல்லப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் 61 கதைகள் இடம்பெற்றுள்ளன.
தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு புத்தக வாசிப்பு முக்கியம் என்றும், சிறுவயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
‘நித்திரைக் கதைகள்’ நூலை நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



