
சிரம்பான், மே-8 – வெளிநாட்டு மீன் இனங்களை தங்களிடம் அனுமதிப் பெறாமல் பொது நீர் நிலைகளில் விட வேண்டாம் என, நெகிரி செம்பிலான் மீன்வளத் துறை பொது மக்களை நினைவுறுத்தியுள்ளது.
மே 2-ஆம் தேதி சிரம்பான், ஜாலான் லீ சாம் கால்வாயில், அரசு சாரா அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் அத்தகைய மீன்களை விட்டதாக புகார் கிடைத்தது.
சென்று பார்த்த போது, ஊடுருவும் இனமான 50 ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் அங்கு விடப்பட்டிருந்தன.
அவை பூர்வீக நீர்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அவற்றை பொது நீர்நிலைகளில் விடக்கூடாது என அந்த NGO-களிடம் கூறினோம் என, மாநில மீன்வளத் துறை இயக்குநர் Kasim Tawe தெரிவித்தார்.
அப்பகுதியில் உள்ள நீரின் தரத்தின் அடிப்படையில், பூயு மற்றும் ஹருவான் ஆகிய இரண்டு இனங்கள் மட்டுமே இயற்கையாகவே அங்கு வாழ ஏற்றவை என்றார் அவர்.
எனவே நீர்நிலைகளில் மீன்களை விட விரும்பும் பொது மக்கள், முதலில் மீன் வளத்துறையிடம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.
இவ்வேளையில் சம்பவ இடத்தை தற்காலிகமாக மூடுமாறு சிரம்பான் மாநகர மன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றம், வீடமைப்பு, போக்குவரத்து ஆகியத் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழுஉறுப்பினர் ஜே. அருள் குமார் அதனை உறுதிப்படுத்தினார்.
மீன்களை விடுவது நல்லெண்ணத்தில் தான் என்றாலும், விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை அவர் நினைவுறுத்தினார்