
தெஹ்ரான், ஜூன்-6 – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பேச்சுவார்த்தை, முடக்கி வைக்கப்பட்டுள்ள 24 பில்லியன் டாலர் ஈரானிய சொத்துகளை விடுவிப்பது தொடர்பான விவகாரத்தில் முட்டுக்கட்டையைச் சந்தித்துள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்தக் கட்ட முடிவை அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தான் எடுக்க வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானிய உச்சத் தலைவர் ஆயதொலா மொஜ்தாபா கமேனியின் (Ayatollah Mojtaba Khamenei) இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெஸாயி (Mohsen Rezaei) CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பந்து இப்போது ட்ரம்ப் வசம் உள்ளது. ஈரான் உடனான ஒப்பந்தத்தை டிரம்ப் விரும்பினால், இந்த 24 பில்லியன் டாலர் சொத்துகளை விடுவிப்பதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கையை சோதிக்கும் முதல் படியாக இருக்கும். இது ஈரானின் சொந்தப் பணம், அமெரிக்காவின் பணம் அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால உடன்பாட்டின்படி முதற்கட்டமாக 12 பில்லியன் டாலரும், பின்னர் மீதமுள்ள 12 பில்லியன் டாலரும் விடுவிக்கப்பட வேண்டும் என ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
இருப்பினும், தற்போதைய நிலையில் பணத்தை விடுவித்தால் அது ஈரான் மீதான அமெரிக்காவின் பிடியை பலவீனப்படுத்திவிடும் என அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும், பாராக் ஒபாமா காலத்தில் வழங்கப்பட்டது போல “பண மூட்டைகளை” (pallets of cash) அள்ளிக் கொடுக்கும் எந்தவொரு உடன்பாட்டையும் ட்ரம்ப் ஏற்க மறுத்து வருகிறாராம்.



