
கோலாலம்பூர், மே-10- தன் பிள்ளை இனி இல்லை என தெரிந்தால் கூட ஒரு தாயை ஒரு வழியாகத் தேற்றி விடலாம்.
ஆனால், பெற்று வளர்த்த பிள்ளை உயிரோடு இருக்கிறதா இல்லையா என தெரியாமல், அதுவும் முதுமைக் காலத்தில் ஒரு தாய் பரிதவிப்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அந்த தவிப்பில், மகளைக் காணாத ஏக்கத்தில் நாட்களை கடத்தி வருகிறார், 6 ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் துப்பாக்கிச் சூட்டின் போது மர்மமான முறையில் காணாமல் போன மோகனாம்பாள் கோவிந்சாமியின் தாய் எம். தனலெட்சுமி.
2019-ல் சிலாங்கூர், ரவாங், ஜாலான் பத்து ஆராங்கில் மிக அருகில் இருந்து போலீசார் 3 ஆடவர்களை சுட்டுக் கொன்ற போது, அவர்களுடன் காரில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போனவர் தான் மோகனாம்பாள்.
சுட்டுக் கொல்லப்பட்ட மூவரில் மோகனாம்பாளின் கணவரும் சகோதரரும் அடங்குவர்.
அச்சம்பவம் நடப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னர் தான், கணவர் மற்றும் 3 பிள்ளைகளோடு 35 வயது மோகனாம்பாள் லண்டனிலிருந்து மலேசியா திரும்பினார்.
இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் ஆகியும் தனது மகள் குறித்து ஒரு தகவலும் இல்லாதது தாங்க முடியாத வேதனை என, வணக்கம் மலேசியாவிடம் தனலட்சுமி தெரிவித்தார்.
பிள்ளையைக் காணாது பரிதவிக்கும் தனலட்சுமிக்கு இந்த வயதான காலத்தில் மகள் வழி பேரப்பிள்ளைகளைக் கொஞ்சவும் வழியில்லை.
பேரப்பிள்ளைகள் தந்தை வழி தாத்தா பாட்டியுடன் இருப்பதாகவும், அவர்களுடன் பேசுவதற்குக் கூட தமக்கு வாய்ப்பில்லாமல் இருப்பதாகவும் தனியாக வாழும் தனலட்சுமி குமுறுகிறார்.
பொது மக்களும் தனது மகளைத் தேடித் தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
மகளைக் காணாமல் துடிக்கும் தமக்கு அரசாங்கம் நீதியை வழங்கியே ஆக வேண்டுமென்கிறார் இவர்.
இவ்வேளையில், மோகனாம்பாள் காணாமல் போன விஷயத்தில் போலீஸே முழுப் பொறுப்பேற்க வேண்டுமென, இக்குடும்பத்தின் வழக்கறிஞரான மனோகரன் மலையாளம் கூறினார்.
ஒருவர் காணாமல் போய் 7 ஆண்டுகள் ஆனால், அவர் இறந்தவராக கருதப்படுவார்.
ஆனால், மோகனாம்பாள் விஷயத்தில் 6 ஆண்டுகளே ஆகியுள்ளன.
மகள் உயிரோடு இருக்கிறார் என இன்னமும் நம்பிக்கையுடன் இருக்கும் தாய்க்கு, போலீஸ் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்.
அது வரை தங்களின் போராட்டம் ஓயாது என மனோகரன் கூறினார்.
நாளை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆனால், இந்த அன்னை, தான் பெற்ற மகளைக் காணாது துன்புற்று வருகிறார்.
விரைவில் அதிகாரத் தரப்பிடமிருந்து பதில் கிடைக்கும் என காத்திருக்க்கும் தாய் தனலட்சுமியின் எதிர்ப்பார்ப்பு இப்போதாவது நிறைவேறுமா?