
சிரம்பான் – ஆகஸ்ட் 2 – கடந்த ஜூலை 26 ஆம் தேதி, சிரம்பான் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மற்றும் பண்ணிசை பாடசாலை இணைந்து வழங்கிய லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ‘சேர்ந்திசை திருமுறை விண்ணப்பம் 2025’ மிக சிறப்பாக நடைபெற்றது.
திருமுறைப் பயிற்சி மையமாக திகழும் பண்ணிசைப் பாடசாலை, லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் திருமுறைப்பண்ணிசை வகுப்பை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்து சமயத்தின் மாமந்திரமாக திகழக்கூடிய 12 திருமுறைகளையும் சிறந்த பண்ணுடனும் தாளத்துடனும் மாணவர்களும் பெரியவர்களும் ஓதுவதற்கு பண்ணிசை பாடசாலை பெருமளவில் துணை புரிந்து வருகின்றது.
திருமுறைகளை ஓதுவதில் அனைவரையும் பாண்டித்துவம் பெற செய்து, திருமுறை போட்டிகளில் அவர்களை பங்கு பெற செய்து கோவில்கள் மட்டுமல்லாமல் அனைத்து இல்லங்களிலும் திருமுறை வழிபாடுகளை வேரூன்ற செய்கின்றனர் பண்ணிசை பாடசாலை இயக்கத்தினர்.
அந்த வகையில், இந்த சேர்ந்திசை திருமுறை விண்ணப்பம், அனைத்து மாணவர்களும் திருமுறைகளை தெள்ள தெளிவாக ஓதுவதற்கு வழி வகை செய்கின்றது.
பண்ணிசை பாட சாலையில் இணைந்து திருமுறைகளை கற்று தேர விருப்பம் கொண்டவர்கள் கலைவாணி நாகப்பன் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.