கோலாலம்பூர், ஏப்ரல் 16 – KLIA-வில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் தெளிவாக இருக்கிறது.
அதற்காக போலீஸ், Malaysia Airports Holdings Bhd, தேசியப் பாதுகாப்பு மன்றம் ஆகியவை கலந்தாய்வு நடத்திட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
குறிப்பாக, MAHB-க்கு போலீஸ் நிச்சயம் உரிய ஆலோசனைகளை வழங்கும் என அந்தோனி லோக் நம்பிக்கைத் தெரிவித்தார்.
என்றாலும், விமான நிலையத்தின் அனைத்து நுழைவாயில்களிலும், உலோகப் பொருட்களைக் கண்டறியும் கருவிகளைப் பொருத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் யோசிக்கவில்லை என்றார் அவர்.
KLIA உள்ளிட்ட விமான நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த SOP-களில் எந்தவொரு மாற்றங்களையும் செய்யும் முன், முக்கிய அம்சங்கள் சிலவற்றை முதலில் பரிசீலிக்க வேண்டியிருப்பதாக அமைச்சர் சொன்னார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை KLIA-வில் ஆடவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதை அடுத்து, அந்த அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்கள் பன்மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என பரவலாகக் கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டை நடத்தி ஒருவருக்குக் காயம் விளைவித்து விட்டு தப்பியோடிய 38 வயது நபர், நேற்று கோத்தா பாருவில் கைதானார்.