
கோலா கிராய், ஆகஸ்ட்-17- கிளந்தான், Kuala Kraiயில் ஐந்து மாத கரு புதைக்கப்பட்டிருந்தது தொடர்பில் திருமணம் முடிந்து மூன்று நாட்களே ஆன பெண்ணும் அவரது முன்னாள் கணவர் எனக் கூறப்படும் ஆடவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். Pasir Puteh மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதற்கு உத்தரவிட்டது.
அக்கரு முன்னதாக Batu Mengkebang நில மறுவாழ்வுத் திட்டப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அது 2024 ஆம் ஆண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அச்சம்பவம் குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விவாகரத்துக்குப் பிறகு அந்தப் பெண்ணுக்கும் அவரது காதலருக்கும் இடையிலான சட்டவிரோத உறவின் விளைவாகவே அக்கரு உருவானதாகக் கருதப்படுகிறது. அப்பெண்ணுடனான தகராறைத் தொடர்ந்து, முன்னாள் கணவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பின்னரே அச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
30 வயதான அப்பெண்ணும் கட்டுமானத் தொழிலாளியான அவரது 32 வயது முன்னாள் கணவரும் விசாரணைக்காக நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அக்கருவை ரகசியமாக அப்புறப்படுத்தி பிறப்பை மறைத்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



