
சுல்தான் இட்ரீஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் (UPSI) தமிழ்த்துறை மற்றும் இந்தியாவின் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரிஆகியவற்றின் கூட்டு முயற்சியில், ஆறாவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு ஒரு சர்வதேசத் தளமாக உருவெடுத்து தஞ்சோங் மாலிமில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. “தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் உலகமயத் தாக்கம்” எனும் கருப்பொருளிலான இம்மாநாட்டிற்கு UPSI தமிழ்த்துறைத் தலைவர் இணைப்பேராசிரியர் முனைவர் கார்த்திகேஸ் பொன்னையா தலைமை தாங்கினார்.
மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த பேராசிரியர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் படைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், நவீனக் கல்விச் சூழலில் தமிழ்மொழியில் செயற்கை நுண்ணறிவின் (AI) தாக்கம் மற்றும் அதன் அவசியம் குறித்து விரிவாக ஆராய்ந்தன.
மே 9-ஆம் தேதி நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்வித் துணை அமைச்சர் வொங் கா வோ (Wong Kah Woh), தமிழ்மொழிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் UPSI ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.
குறிப்பாக, ஆசிரியர்களுக்கு வேலை இல்லாத சூழலை நிவர்த்தி செய்யும் வகையில், அவர்களை மாற்றுப் பாடங்களுக்கு மறு-அடையாளப்படுத்தும் (Re-tagging) நடவடிக்கை குறித்து அவர் விளக்கமளித்தார்.
அத்துடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆசிரியர் பயிற்சி பண (Practicum Allowance) குறித்து உயர்கல்வி அமைச்சிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
மே 10-ஆம் தேதி நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்துகொண்ட பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன், மாநாட்டிற்கு ஆதரவளித்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன், வருங்காலங்களில் இதுப்போன்ற மாநாட்டிற்குத் தனது சார்பில் நிதியுதவி (Sponsorship) வழங்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், சிறப்பாக நடைப்பெற்ற மாநாட்டை தலைமை தாங்கிய இணைப்பேராசிரியர் முனைவர் கார்த்திகேஸ், இம்மாநாடு குறித்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து, மாநாட்டின் வளர்ச்சி மற்றும் தாக்கம் குறித்து தமிழ் ஆர்வலர்கள் சிலர் வணக்கம் மலேசியாவிற்கு அளித்த பேட்டியில் பேசினர்.
நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடத்திய முனைவர் கார்ர்த்திகேஸ் அவர்களுக்கு பாராடுகளைத் தெரிவித்து, இம்மாநாடு தொடர்ந்து நடைபெற தாம் ஊக்குவிப்பதாக ட்த்தோ சிவநேசன் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் தற்காலச் சவால்கள் மற்றும் எதிர்கால ஆசிரியர்களுக்கான மன அழுத்த மேலாண்மை ஆலோசனைகள் எனப் பல்வேறு கோணங்களில் இம்மாநாடு பயனுள்ளதாக அமைந்தது. தமிழ்மொழிக் கல்வியை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதில் இந்த ஆறாவது பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.



