
ஷா ஆலாம், ஆகஸ்ட்-26,சிலாங்கூர், ஷா ஆலாம், தாமான் ஆலாம் மெகாவில் உள்ள ஜாலான் மண்டோலின் 33/5 பகுதியில் கும்பல் இடையே நிகழ்ந்த மோதலில், கார் மோதி ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், வெட்டுக்காயங்களுடன் கூடிய மோதலுக்குப் பிறகு, நீல நிற பெரோடுவா அல்ஸா கார் ஒன்று பாதிக்கப்பட்ட நபரின் மீது மோதியதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Sarudin Samah தெரிவித்தார்.
கடுமையான காயங்களுக்கு உள்ளான அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
வைரலான இச்சம்பவம் குறித்த தகவல்களைக் கொண்ட பொது மக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



