
ஜகார்த்தா, ஜூன் 17 – சவுதி அரேபியாவில் ஹாஜ் யாத்திரையை
முடித்த யாத்திரிகர்களை ஏற்றிக்கொண்டு இந்தோனேசியா திரும்பிக் கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் வந்ததைத் தொடர்ந்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அடையாளம் தெரியாத தனிப்பட்ட நபர் ஒருவர் இந்தோனேசிய விமான நிலையத்தின் அதிகாரிகளுக்கு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சலை அனுப்பியதாக இந்தோனேசிய சிவில் விமானத்துறையின் நடவடிக்கை இயக்குநர் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து ஜகார்த்தாவுக்கு சேவையில் ஈடுபட்டிருந்த Saudia Airlines SV 5276 விமானத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் உள்ளூர் நேரப்படி காலை மணி 7.30 அளவில் கிடைக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து காலை மணி 10 அளவில் அந்த விமானத்தின் விமானி ஜகார்த்தா – Soekarno -Hatta விமான நிலையத்திற்கு செல்லாமல் மேற்கு இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் மேடானிலுள்ள Kulanamu அனைத்துலக விமான நிலையத்தில் அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். அந்த விமானத்தில் இருந்த 442 ஹாஜ் யாத்திரிகர்களில் 207 ஆண்கள் மற்றும் 235 பெண்களும் அடங்குவர். அந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்ட பின் வெடிகுண்டு அகற்றும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர்.