
கோலாலம்பூர். ஜூன்-22 – லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்சா ஜைனுடின்
( Hamzah Zainudin) மீண்டும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகியுள்ளார்.
ஜூன் 18 ஆம் தேதியிலிருந்து அவரது இந்த நியமனம் அமலுக்கு வருவதாக நாடாளுமன்ற சபாநாயகர் ஜொஹாரி அப்துல் அறிவித்தார்.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்திற்குப் பிறகு ஏற்பட்ட பல புதிய முன்னேற்றங்கள் மற்றும் தகவல்களைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற கூட்ட விதிமுறையின் 4(A)(3)-இன் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதோடு ஹம்சாவுக்கு தனது வாழ்த்துக்களையும் ஜொஹாரி தெரிவித்துக்கொண்டார்.
ஹம்சாவுக்கு பதில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம்தேதிவரை கெமமான் நாடாளுமன்ற உறுப்பினருமான அகமட் சம்சுரி மொக்தார் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் பெர்சத்து கட்சியிலிருந்து ஹம்சா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான முஹிடின் யாசின் , எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து கேள்வி எழுப்பியதால் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் தலைவரான சம்சுரி எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.
பாஸ் கட்சியின் 43 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இதர 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து Parti wawasan Negara என்ற புதிய கட்சியின் தலைவருமான ஹம்சா எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என இதற்கு முன் பாஸ் கட்சியின் தலைவரான அப்துல் ஹடி அவாங் கிளந்தானில்
அண்மையில் அறிவித்திருந்தார்.



