
கோலாலம்பூர், பிப்ரவரி-25-அடுத்தாண்டிலிருந்து ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கணிதப் பாட நேரம் அதிகரிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதியத் திட்டத்தின் கீழ், முதலாமாண்டு முதல் மூன்றாமாண்டு வரை உள்ள மாணவர்கள் வாரத்திற்கு மூன்றரை மணி நேரங்கள் கணிதம் கற்பார்கள்.
நான்காமாண்டு முதல் ஆறாமாண்டு வரையிலான மாணவர்கள் வாரத்திற்கு 3 மணி நேரம் கணிதப் பாடம் பெறுவார்கள்.
மொத்தமாக, ஆரம்பப் பள்ளி மாணவர்கள் 6 ஆண்டுகளில் 608 மணி நேர கணிதக் கல்வியைப் பெறுவார்கள்.
நடப்பில் அது 576 மணி நேரங்களாக மட்டுமே உள்ளது.
இம்மாற்றம் மாணவர்களின் அடிப்படை கணித திறன்களை வலுப்படுத்தவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான அடித்தளத்தை மேம்படுத்தவும் உதவும் என அமைச்சு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
இது, அடுத்தாண்டில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பப் பள்ளிகளில் கணிதப் பாட நேரத்தை 6 ஆண்டுகளில் குறைந்தது 1,000 மணி நேரங்களாக அதிகரிக்க அமைச்சு கொண்டுள்ள குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டம் குறித்து பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி மக்களவையில் கேட்ட கேள்விக்கு அமைச்சு அவ்வாறு பதிலளித்தது.



