
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 24 – ஒற்றுமை அரசாங்கத்தில் தங்கள் எதிர்காலம் குறித்து தனது கட்சி அவசர முடிவு எடுக்காதென்றும் வருடாந்திர பொதுக் கூட்டம் வரை காத்திருக்க வேண்டுமென்றும் மலேசிய சீன சங்கத் (MCA) தலைவர் வீ கா சியோங் கூறியுள்ளார்
அரசாங்க நிர்வாகத்தில் MCA-வின் பங்கு மீதான அதிருப்தியைத் தொடர்ந்து பாரிசன் நேஷனல் (BN)-ஐ விட்டு வெளியேறும் முயற்சியில் MCA இருப்பதாக அண்மைய காலமாக ஊகங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று MCA பொதுச் செயலாளர் சோங் சின் வூன், கூட்டணியின் எதிர்காலம் குறித்து BN தெளிவான முடிவை எடுக்க தாமதப்படுத்தினால், கட்சி அதன் சொந்த திசையை தீர்மானிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
15வது பொதுத்தேர்தலுக்கு பிறகு அதன் உத்தியை மறுசீரமைக்க MCA BN-க்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் அளித்ததாகவும், ஆனால் BN-க்குள் உள்ள நிச்சயமற்ற தன்மை MCA உறுப்பினர்களை ஏமாற்றத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.