
அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 5 – குவாலா கெடாவிலுள்ள கட்டுமானத் தளமொன்றில் மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) நடத்திய சோதனை நடவடிக்கையில் 81 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் (PATI) கைது செய்யப்பட்டனர்.
127 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 73 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 42 பேர் வங்காளாதேசத்தினர், 26 பேர் இந்தோனேசியர்கள், 10 பேர் மியான்மர் நாட்டவர்கள், ஒருவர் பாகிஸ்தானியர் மற்றும் இருவர் இந்தியர்கள் ஆவர்.
செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி நாட்டில் தங்கியிருந்தது, அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியது மற்றும் குடிநுழைவு விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேல் நடவடிக்கைக்காக குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் அல்லது பாதுகாக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.



