
நியூ யோர்க், ஜூன்-8 – ஜூன் 2-ஆம் தேதி, அமெரிக்காவின் நியூ யோர்க்கிலிருந்து டல்லாஸ் நகருக்குப் புறப்பட்ட Southwest Airlines விமானம், எதிர்பாராத விதமாக நாஷ்வில்லுக்கு (Nashville) திருப்பி விடப்பட்டது.
பயணிகளிடம், இது ஒரு எரிபொருள் நிரப்புவதற்கான இடைவேளை என்று கூறப்பட்டது.
ஆனால் உண்மை அதுவல்ல.
விமானம் தரையிறங்கியவுடன், துப்பாக்கி ஏந்திய 8 அதிகாரிகள் விமானத்துக்குள் வந்து, எல்லா பயணிகளும் அவர்கள் இருக்கைகளில் அமர்ந்து, தலையை கீழ் வைக்கும்படி கூறினர்.
பின்னர் ஓர் ஆண் பயணியை கைது செய்து, அவரது பைகளை சோதனை செய்தனர்.
இதற்கான காரணம் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கக்கூடியது… காரணம் அந்த ஆடவர் விமானத்தில் வெடிகுண்டு வைத்துள்ளார் என அவரின் மனைவியே புரளியைக் கிளப்பியிருந்தார்.
ஆனால் விமானம் தரையிறங்கும் முன்பே, அவர் தனது கூற்றை திரும்ப பெற்று விட்டார்.
இருந்தாலும், பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் போலீசார் நடவடிக்கையில் இறங்கி விட்டனர்.
அந்த நபருக்கோ இந்தச் சம்பவம் பற்றி எதுவும் தெரியாது.
இந்நிலையில் மற்ற பயணிகளும் வெளியேற்றப்பட்டு, எல்லா பைகளும் மீண்டும் பரிசோதிக்கப்பட்டன.
இதனால் விமானம் சுமார் 4 மணி நேரம் தாமதமானது.
பொய்யான புகார் அளித்த அந்த பெண்ணை அமெரிக்க மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறையான FBI விசாரித்ததில், கணவர் மீது கொண்ட அதிருப்தியிலேயே தாம் அவ்வாறு புரளி கிளப்பியதாகக் கூறினார்.
இதையடுத்து அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படலாம் எனக் கூறப்படுகிறது.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்காக Southwest Airlines, அனைவருக்கும் 100 டாலர் பற்றுச்சீட்டு வழங்கியது