
சபா, ஜூன் 8 – பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ கடற்கரைக்கு அருகே இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சபாவின் சில கடலோரப் பகுதிகளுக்கு மலேசிய வானிலை ஆய்வு துறையான MetMalaysia சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 7.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தவாவ், செம்போர்னா, குனாக் மற்றும் லஹாட் டத்து (Tawau, Semporna, Kunak & Lahad Datu) பகுதிகளில் காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைகளின் உயரம் சுமார் 0.4 மீட்டர் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, குறிப்பிட்ட நேரத்தில் கடற்கரை பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், குறைந்தது ஒருவர் உயிரிழந்ததாகவும் நான்கு பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MetMalaysia நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், புதிய தகவல்கள் கிடைத்தால் உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.



