
கோலாலம்பூர், ஜூலை-26-சிறையிலிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு இதய அறுவை சிகிச்சை இனி தேவையில்லை என்றும், அதற்குப் பதிலாக அவரது உடல்நிலை மருந்துகள் மூலமாகவே கவனிக்கப்படும் என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் ஆரம்பத்தில் தமனிகளில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்து, அவருக்கு angioplasty அல்லது stent பொருத்தும் அறுவை சிகிச்சை தேவைப்பட 95 விழுக்காடு வாய்ப்புள்ளதாகக் கூறியிருந்தனர்.
எனினும், நேற்று மேற்கொள்ளப்பட்ட coronary angiogram மற்றும் நிபுணர்களின் விரிவான பரிசோதனைக்குப் பிறகு, பலூன் angioplasty அல்லது stent பொருத்துவதோ தேவையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக, அவரது வழக்கறிஞர் நிறுவனமான Messrs. Shafiee & Co அறிக்கை வெளியிட்டுள்ளது
அதற்குப் பதிலாக, தொடர்ந்து மருந்துகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்பு மூலம் இரத்த நாள அடைப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
73 வயதான நஜீப் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் நெருக்கமான கண்காணிப்பில் அவர் தொடர்ந்து மீண்டு வருவார் என்றும் அந்த நிறுவனம் மேலும் கூறியது.



