
ஜோர்ஜ்டவுன், மே-23-சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அவதூறு வீடியோக்கள் தொடர்பாக இணையவாசி ஒருவருக்கு எதிராகத் தொடரப்பட்ட சிவில் வழக்கில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான RSN ராயருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் ராயருக்கு 100,000 ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 50 வயது எஸ். முருகேசன் என்பவர் வாட்சப், டிக் டோக் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியிட்ட சில வீடியோக்களில், ராயர் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் நிதியைத் திருடிவிட்டார் என்றும் மேலும் பல நிதிகளை முறைகேடு செய்யத் திட்டமிட்டுள்ளார் என்றும் அவதூறாகப் பேசியிருந்தார்.
இந்த வீடியோக்கள் ஒரு வழக்கறிஞராக, மக்கள் பிரதிநிதியாக மற்றும் DAP கட்சியின் தலைவராக இருக்கும் தனது நற்பெயருக்குக் கடும் களங்கத்தை ஏற்படுத்தியதாக ராயர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
தற்போது இந்த வழக்கில் வெற்றி கிடைத்துள்ள வேளையில், குற்றம் சாட்டப்பட்ட முருகேசன் இழப்பீட்டுடன் சேர்த்து கூடுதலாக 4,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையையும் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



