
AI அதாவது செயற்கை நுண்ணறிவு உலக வளர்ச்சியை முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னெடுத்துச் செல்லும் இன்றைய சூழலில், அதனைத் தாங்கிச் செல்லும் ஆற்றல் அமைப்புகளும் நிலைத்தன்மை, மீள்திறன் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டியது அவசியம்.
இந்தியாவின் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நடைபெற்ற Green Growth Economic Summit 2026 மாநாட்டில், மலேசியாவின் சார்பில் பேச்சாளராக கலந்து கொண்ட போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ எம் சரவணன் அவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தொழில்நுட்ப முன்னேற்றம் மட்டுமே போதுமானதல்ல என்றும், தொலைநோக்குப் பார்வையுள்ள அரசுக் கொள்கைகள், நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் பொறுப்புமிக்க தலைமைத்துவமே பசுமை வளர்ச்சியின் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, தெற்கு உலக நாடுகள் (Global South), புதுமை, அறிவுப் பகிர்வு மற்றும் கூட்டாண்மையின் மூலம் உலகின் பசுமை ஆற்றல் மாற்றத்துக்கு தலைமை வகிக்கும் திறன் கொண்டுள்ளன என்றும், இது இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமல்லாது வருங்கால சந்ததியினருக்கான புதிய பொருளாதார வாய்ப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“எதிர்காலம் செயற்கை நுண்ணறிவால் மட்டுமே இயக்கப்படுவதில்லை; இன்று நாம் எடுக்கும் பொறுப்பான முடிவுகளால்தான் அது வடிவமைக்கப்படுகிறது” என்றும் டத்தோஸ்ரீ சரவணன் தனது உரையில் வலியுறுத்தினார்.



