
ஈப்போ – மே 21- இரவு நேரத்தில், காட்டு விலங்குகள், குறிப்பாக யானை தாக்குதல்களைத் தவிர்க்க, கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையை (JRTB) பயன்படுத்துவதை மோட்டார் சைக்கிள் மற்றும் சிறிய வாகன ஓட்டுனர்கள் தவிர்க்க வேண்டுமென்று பேராக் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை (Perhilitan) இயக்குநர் யூசோஃப் ஷெரிப் (Yusoff Shariff) கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுவாக யானைகள் இரவு வேளையில்தான் உணவுத் தேடி செல்வதாகவும், வாகன ஓட்டுனர்கள் பகலில் அச்சாலையைப் பயன்படுத்துவது சிறந்தது என்றார் யூசோஃப்.
மேலும், இரவில் பயணம் மேற்கொள்ளும் பயனர்கள், வாகனத்திலிருந்து சத்தம் ஏற்படுத்தி யானைகளை ஆத்திரமூட்டுவதை தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
பொதுமக்கள் பேராக் வனவிலங்குத்துறையின் ஆலோசனைக்கேற்றவாறு செயல்பட்டால் இச்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க இயலும் என்றும் Perhilitan நம்பிக்கை கொண்டுள்ளது.