Latestமலேசியா

உத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் விபத்து; 1 குழந்தை உட்பட7 பேர் பலி

கேதார்நாத், ஜூன்-15,

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய புனிதத் தலமான கேதார்நாத்துக்கு செல்லும் வழியில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

விமானி, 5 பெரியவர்கள் மற்றும் 1 குழந்தையே அவர்களாவர். முன்னதாகக் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டர், வெறும் 10 நிமிடம் பறந்த பிறகு காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

கால்நடைகளுக்குத் தீவனம் தேடப் போன உள்ளூர்வாசிகள் ஹெலிகாப்டரைக் கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலையே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடம் விரைந்துள்ளது. இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த கேதார்நாத், மேடு பள்ளத்தோடு கணிக்க முடியாத வானிலைக்குப் பெயர் பெற்றதாகும்.

இந்நிலையில் கேதார்நாத் கோயில் வாயில்கள் மே 2-ஆம் தேதி திறந்ததிலிருந்து அங்கு நடந்துள்ள ஐந்தாவது விபத்து இதுவாகும்.

ஆகக் கடைசியாக ஜூன் 7-ஆம் தேதி கேதர்நாத் புறப்பட்ட ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால் நெடுஞ்சாலையில் அது அவசரமாகத் தரையிறங்கியது. கட்டடங்களுக்கு மிக அருகில் ஆபத்தாக அது வந்ததோடு, அதன் வால் சுழலி, நிறுத்தி வைக்கப்பட்ட காரின் மீது விழுந்தது.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்; விமானி சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!