உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கொலை மிரட்டல்: முன்னாள் ஓட்டுநர் குற்றச்சாட்டை மறுத்தார்

கோலாலாம்பூர், மே-16,
உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அவரின் முன்னாள் காரோட்டுநர் கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
எனினும், Fareez Zin எனும் 39 வயது அவ்வாடவர், குற்றவியல் சட்டத்தின் கீழ் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரினார்.
மே 8-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணி வாக்கில் ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலாம்பூர் உயர் நீதிமன்றத்தில், 64 வயது நீதிபதி Gan Techiong-கிடம் அவ்வாறு நடந்துகொண்டதாக Fareez மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றம் ஜாமீனில் வெளிவர முடியாத ஒன்று என்ற அரசுத் தரப்பின் ஆட்சேபனையையும், நீதிபதியின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் கருத்தில் கொண்ட மஜிஸ்திரேட் Farah Nabihah Dan, அவ்வாடவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.
இதனிடையே, சிறுநீர் பரிசோதனையில் amphetamine மற்றும் methamphetamine) போதைப்பொருள் இருந்ததாகச் சுமத்தப்பட்ட மற்றொரு தனிக்குற்றச்சாட்டையும் Fareez மறுத்து, விசாரணை கோரினார்.
இக்குற்றச்சாட்டுக்கு அவருக்கு ஒரு நபர் உத்தரவாதத்தில், 2,000 ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது.



