
புத்ராஜெயா, ஆகஸ்ட்-16-2026-ஆம் ஆண்டுக்கான ‘STR’ எனப்படும் ‘சும்பாங்கான் துனாய் ரஹ்மா’ மூன்றாம் கட்ட ரொக்க உதவித் தொகை நேற்று முதல் கட்டம் கட்டமாக வழங்கப்படுகிறது.
இந்தக் கட்டத்தில் 5.3 மில்லியன் பயனர்களுக்கு விநியோகிக்க 1.2 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உதவி பெறுநர்களின் எண்ணிக்கை, இவ்வாண்டு தொடக்கத்தைக் காட்டிலும் 300,000 அதிகமாகும்.
இந்த 5.3 மில்லியன் பேரில் 3.9 மில்லியன் மக்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; தவிர தனித்து வாழும் 1.4 மில்லியன் மூத்த குடிமக்களும் பயனடைவர்.
வருமானம் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், குடும்பங்களுக்கு 150 முதல் 600 ரிங்கிட் வரையிலும், தனித்து வாழும் மூத்த குடிமக்களுக்கு 150 ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் இவ்வாண்டின் முதல் மூன்று கட்டங்களுக்கான மொத்த STR விநியோகம் 3.6 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.
வங்கி கணக்கு உள்ளவர்களுக்கு தொகை நேரடியாக செலுத்தப்படும் வேளைய, கணக்கு இல்லாதவர்கள் BSN வங்கிக் கிளைகளில் ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்.



