
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட்.18- இம்மாதம் 13 ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த, ஐந்து குழந்தைகளின் தாயான 36 வயதுடைய பெண்மணிக்கு மரியாதை செய்யும் பொருட்டு பினாங்கு மருத்துவமனை பச்சை நிற விளக்குகளால் ஒளிரவிடப்பட்டது.
அப்பெண்மணி ஏற்கனவே உறுப்பு தானம் செய்பவராகப் பதிவு செய்திருந்ததாகவும், அவரது விருப்பத்திற்கு அவரது குடும்பத்தினர் முழு ஆதரவு அளித்திருந்ததாகவும் பினாங்கு சுகாதாரத் துறை தெரிவித்தது. அப்பெண்மணி உயிருடன் இருந்த போது எடுத்த ஓர் உன்னதமான முடிவு, உடல் உறுப்பு தேவைப்படுவோருக்கு விலைமதிப்பற்ற பரிசாக அமைந்துள்ளது.
இனம், மதம் கடந்து, உறுப்பு தானம் செய்த அப்பெண்மணியின் குடும்பத்தினரின் மன உறுதியும் தாராள மனப்பான்மையும் அனைத்து மலேசியர்களுக்கும் ஒரு முன்மாதியாக அமையட்டும் என்றும் அது குறிப்பிட்டது.
இவ்வேளையில் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோர், ‘MySejahtera’ செயலி மூலம் உறுதிமொழியை எளிதாகப் பதிவு செய்யலாம். உடல் உறுப்புகளுக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பவர்களின் வாழ்வில் நீங்களும் ஒரு கதாநாயகனாக மாறலாம் என பினாங்கு சுகாதாரத்துறை மேலும் கூறியது.



