
வாஷிங்டன், ஜூன்-30 – டிக் டோக்கை வாங்குவதற்கு ஒரு பணக்கார தரப்பு அடையாளம் காணப்பட்டிருப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அது யாரென்பதை இன்னும் 2 வாரங்களில் தம்மால் அறிவிக்க முடியும் என்றார் அவர்.
டிக் டோக்கை விற்க சீனாவின் ஒப்புதலும் அவசியம்; அதிபர் சீ சின் பிங் அதனை அங்கீகரிப்பார் என தாம் நம்புவதாக, Fox தொலைக்காட்சி செய்திக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் சொன்னார்.
சுருக்கமான வீடியோ பகிர்வுத் தளமான டிக் டோக் சீனாவைத் தளமாகக் கொண்ட ByteDance எனும் இணைய நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அது மிரட்டலை ஏற்படுத்துவதாகக் கூறி, ஜோ பைடன் ஆட்சியில் அச்செயலிக்குத் தடை விதிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி 19-க்குள் சீனாவுக்கு வெளியே எந்தவொரு நிறுவனத்திற்கும் டிக் டோக்கை விற்கலாம்; இல்லையேல் அமெரிக்காவில் அது தடைச் செய்யப்படுவது உறுதி என தெரிவிக்கப்பட்டது.
எனினும் அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் ட்ரம்ப் முகாமுக்கு டிக் டோக் பெரிதும் உதவியது என்பதால், பதவிக்கு வந்த கையோடு டிக் டோக் மீதான தடையை ட்ரம்ப் ஒத்தி வைத்தார்.
ஜூன் 19 வரை 2 முறை அது நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 90 நாட்களுக்கு தடையை நிறுத்தி வைத்துள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு சர்ச்சையால் சீனாவுடன் ஏற்பட்ட மோதலால், டிக் டோக் விற்பனை தள்ளிப் போவதாக ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.