காவல்துறையினர் கடமையாற்ற இடையூறாக இருந்த சிங்கப்பூர் நாட்டவர் உட்பட நான்கு ஆடவர்கள் கைது

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-19- ஜோகூரில் Sultan Iskandar கட்டிடத்திற்குச் செல்லும் வழியில், சாலையோரத்தில் போக்குவரத்துப் போலீசார் தங்கள் கடமையைச் செய்வதற்கு இடையூறாக இருந்த நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிங்கப்பூர் நாட்டவர் ஒருவரும் அடங்குவார்.
அச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்ததாகவும் 25 முதல் 46 வயதுக்குட்பட்ட அந்த நான்கு சந்தேக நபர்களும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டதாகவும் தென் ஜோகூர் பாரு காவல் துறைத் தலைவர் Azrul Hisham Mohd Shaffei தெரிவித்தார்.
சாலைத் தகராறே கைதான நான்கு ஆடவர்களுக்கு இடையே மூண்ட மோதலுக்குக் காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது தம்மை அமைதிப்படுத்த முயன்ற போக்குவரத்துப் பிரிவு காவல் வீரர்களுக்குச் சினமூட்டும் வகையில் சிங்கப்பூர் ஆடவர் நடந்து கொண்டார். அவரிடம் இருந்து ஒரு தலைக்கவசம் மற்றும் கத்தி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக Azrul கூறினார்.
முந்தைய பதிவுகளை ஆய்வு செய்ததில், இரு சந்தேக நபர்கள் மீது மொத்தம் 16 குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
அனைத்துச் சந்தேக நபர்களும் நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அச்சம்பவம் மீதான காணொளி முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.



