
கோலாலாம்பூர், ஜூன்-11 – ஒரு தலைப்பட்ச மதமாற்றத்தைத் தொடர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் உரிமை தொடர்பில் சட்டப் போராட்டம் நடத்தி வந்த லோ சியூ ஹோங்கின் முன்னாள் கணவர் மரணமடைந்துள்ளார்.
Muhammad Nagahswaran Muniandy நேற்று காலமானதை லோவின் வழக்கறிஞர் Shamsher Singh Thind உறுதிப்படுத்தினார்.
இஸ்லாதுக்கு மதம் மாறியவரான Nagahswaran, லோவுக்கும் தனக்கும் பிறந்த 3 பிள்ளைகளை 2020-ல் பெர்லிஸுக்குக் கூட்டிச் சென்று, ஒருதலைப்பட்சமாக இஸ்லாதுக்கு மதம் மாற்றி விட்டார்.
இதையடுத்து பிள்ளைகளை வளர்க்கும் உரிமை, 2019 தொடங்கி 2021 வரை பல நீதிமன்ற உத்தரவுகளால் லோவிடமே ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், தனது 3 பிள்ளைகளை அசல் மதமாக இந்து மதத்திற்கே மாற்றக் கோரி லோ விண்ணப்பித்தார்; அதில் கடந்தாண்டு கூட்டரசு நீதிமன்றம், 3 பிள்ளைகளும் இந்துக்களே என முக்கியத் தீர்ப்பளித்தது; பிள்ளைகளின் மதங்களை மாற்றுவதற்கு தாய் தந்தை இருவரின் சம்மதமும் தேவை என அது கூறியது.
அம்முடிவை எதிர்த்து பெர்லிஸ் அரசாங்கம் செய்திருந்த கடைசி மேல்முறையீடும் இவ்வாண்டு ஏப்ரலில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், 2019-ல் தன்னைத் தாக்கி காயப்படுத்தியதாக லோ தொடர்ந்த வழக்கில் 2023-ல் Nagahswaran மீது குற்றம் சாட்டப்பட்டது.
அக்குற்றச்சாட்டை மறுத்து 10,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர், வழக்கு விசாரணை தொடங்கும் வரை லோவைத் தள்ளியிருப்பதோடு சாட்சிகளையும் கலைக்க முயலக் கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருந்தது.
அவ்வழக்கு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒருவழியாக இவ்வாண்டு செப்டம்பரில் தொடங்கவிருந்த நிலையில், Nagahswaran காலமாகியுள்ளார்.