
குவந்தான், மே 18 – செம்பனை மரத்திலிருந்து செம்பனை குலையை தொழிலாளி ஒருவர் வெட்டியபோது அந்த குலை தவறுதலாக அவரது தலையில் விழுந்ததில் மரணம் அடைந்தார்.
குவந்தான் ,பெல்டா புக்கிட் கோ அருகே நிகழ்ந்த அந்த துயரச் சம்பவத்தில் , 50 வயதான தொழிலாளி இறந்தார்.
12 மீட்டர் உயரமுள்ள மரத்திலிருந்து குலையை வெட்டியபோது அந்த குலை அவரது தலையில் விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.
செம்பனை தோட்ட தொழிலாளர்கள் பொதுவாக உயரமான மரங்களிலிருந்து பழுத்த ஆரஞ்சு நிறப் பழ செம்பனை குலைகளை வெட்டுவதற்கு, கூர்மையான கத்திகள் பொருத்தப்பட்ட நீண்ட கம்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.
கீழே விழும் குலைகள் சில வேளையில் நழுவி, கீழே உள்ள தொழிலாளர்கள் மீது படக்கூடும் என்பதால், இந்த வேலை அபாயகரமானதாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு செம்பனை குலை சராசரி 15 கிலோ முதல் 25 கிலோவரை எடையுள்ளதாக இருக்கும்.
சில குலைகள் இன்னும் கூடுதல் எடையைக் கொண்டதாக இருக்கும் சாத்தியமும் உள்ளது. மே 16 ஆம் தேதியன்று மாலை மணி 5.45 க்கு தோட்ட உரிமையாளரிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக குவந்தான் போலீஸ் தலைவர் உதவி ஆணையர் அஷாரி அபு சமா தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் செம்பனை மரத்திற்கு அருகே அந்த தொழிலாளி தரையில் விழுந்து கிடந்தததாகவும் பின்னர் அவர் இறந்துவிட்டதை மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தியதாக அஷாரி அபு சமா கூறினார்.



