![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-06-at-12.41.24-PM-780x470.jpeg)
புத்ரா ஜெயா, டிச 6 – 15 ஆவது பொதுத் தேர்தலின்போது குவா மூசாங் நாடாளுமன்ற தொகுதியில் பெரிக்காத்தான் நேசனலின் முகமது அசிஸீ அபு நைம்
அடைந்த வெற்றியை செல்லுபடியாகது என கோரும் தேசிய முன்னணி வேட்பாளர் ரஸாலி ஹம்சாவின் மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
அந்த தொகுதிக்கான தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் மனுவை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் துங்கு ரசாலியின் வழக்கறிஞர் முகமது அஸ்மி மஹ்மூத் தோல்வி கண்டார். மேல் முறையீடு நீதிமன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம் தலைமையிலான மூவர் கொண்ட கூட்டரசு நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதிகள் முகமது அஸ்மியின் முறையீட்டை தள்ளுபடி செய்தனர். அதோடு வழக்கு செலவுத் தொகையான 30,000 ரிங்கிட்டையும் செலுத்த வேண்டும் என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முகமது அசிஸீயின் வழக்கு மனுவுக்கு எதிரான முன்னோடி ஆட்சேபனையை ஏற்று நீதிபதி அபாங் இஸ்கந்தர் ஏகமனதாக தீர்ப்பு வழங்கினார். லஞ்சம் தொடர்பான குற்றாச்சாட்டின் அடிப்படையில் குவா மூசாங் நாடாளுமன்ற தேர்தல் முடிவு செல்லாது என கோரும் வழக்கு மனு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து துங்கு ரசாலியின் வழக்கறிஞர் முகமது அஸ்மி கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். குவா மூசாங் தொகுதியில் துங்கு ரசாலி 163 வாக்குகள் வேறுபாட்டில் முகமது அசிஸீயிடம் தோல்வி கண்டார்.