
ஷா ஆலாம், ஆகஸ்ட்.10- கோத்தா கெமுனிங் சட்ட மன்றத் தொகுதி சேவை மையம், Challenger Chess Academyயுடன் இணைந்து, ‘2026 கோத்தா கெமுனிங் சதுரங்கப் போட்டி’யை நேற்று வெற்றிகரமாக நடத்தியது. காலை 9.00 மணி முதல் மாலை 5:00 மணி வரை Bukit Rimaவுவில் உள்ள Dewan Aster அரங்கில் நடைபெற்ற அப்போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கவும் நிகழ்வை உற்சாகப்படுத்தவும் நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் வருகை புரிந்திருந்தனர்.
அப்போட்டியைத் தொடக்கி வைத்து உரையாற்றிய கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஸ் சம்புநாதன், குழந்தைகளையும் இளைஞர்களையும் மன வளர்ச்சி, ஒழுக்கம் மற்றும் அறிவாற்றல் திறன்களை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக் ஊக்குவிக்கும் நோக்கில் அப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் மின்னணு சாதனங்களுக்கு அதிக அடிமையாகி விடாமல் இருப்பதை உறுதி செய்வது மிகப் பெரிய சவாலாக உள்ளது. மகிழ்ச்சியாக அதே வேளை, அவர்களின் மனதைச் சுறுசுறுப்பாகவும் ஆக்கப்பூர்வமாகவும் வைத்திருக்கக்கூடிய மாற்றுப் பொழுதுபோக்குகளாக சதுரங்கம் பலனளிக்கும் பங்காற்றுகிறது.
சதுரங்கம் என்பது வெறும் பலகை விளையாட்டு அல்ல. அது ஒரு குழந்தையின் தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன் பல்வேறு சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவது, பொறுமை மற்றும் கவனத்தை வளர்ப்பது, நீண்ட நேரம் கவனம் செலுத்துதல், நெருக்கடியான சூழலில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது, சவால்களை முறியடிப்பதற்கான தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது உள்ளிட்ட பலனைக் கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், அப்போட்டியை நடத்த உதவிய ஹாங்காங் சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் K.K. Chan, சிலாங்கூர் மாநிலச் சதுரங்கச் சங்கத் தலைவர் குமரேசன் தியாகராஜு, சிலாங்கூர் மாநிலச் சதுரங்கச் சங்கச் செயலாளர் Sendy Yanthy, சிலாங்கூர் மாநிலச் சதுரங்கச் சங்கத்தின் பொருளாளர் கெங்கேஸ்வரன் ஆகியோருக்கு பிரகாஷ் சம்புநாதன் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.



