கோலாதிரெங்கானு, ஜூலை 3 – இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட இல்லாத கிரிப்தோ நாணய முதலீட்டை நம்பி அதில் 1.6 மில்லியன் ரிங்கிட் முதலீடு செய்து பெண் ஒருவர் ஏமாந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சமூக வலைத்தளத்தில் ஆடவர் ஒருவர் இணையத்தளத்தில் செய்த விளம்பரத்தை பார்த்து கோலாத்திரெங்கானுவைச் சேர்ந்த 49 வயது பெண் முதலீடு செய்து மோசடிக்கு உள்ளாகியுள்ளதாக திரெங்கானு போலீஸ் தலைவர் டத்தோ முகமட் கைருடின் ( Mohd Khairi Khairudin ) தெரிவித்தார். அந்த விளம்பரத்தினால் கவரப்பட்ட அப்பெண் இணையம் வாயிலாக பாரம் ஒன்றை பூர்த்தி செய்து அனுப்பியவுடன் சம்பந்தப்பட் அந்த ஆடவர் அப்பெண்ணை அழைத்துள்ளார். அதோடு அந்த முதலீடு தொடர்பாக தகவலகளை மேலும் அறிந்துகொள்வதற்கு தாம் அமைத்திருக்கும் வாட்சாப் குழுமத்தில் இணையும்படியும் அந்த சந்தேகப் பேர்வழி தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தாங்கள் தெரிவித்த கணக்கிற்கு பணத்தை அனுப்பிவைக்குப்டியும் அந்த பெண் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இந்த முதலீட்டிற்காக 90 மில்லியன் ரிங்கிட் மிகவும் குறுகிய காலத்திலேயே வருமானமாக கிடைக்கும் என அந்த பெண்ணுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வாக்குறுதி வழங்கப்பட்டதற்கு ஏற்ப பணம் வழங்கப்படவில்லை என்பதால் அப்பெண் மீண்டும் சம்பந்தப்பட்ட ஆடவரிடம் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவனது தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தாம் 1. 6 மில்லியன் ரிங்கிட் ஏமாந்துவிட்டதை உணர்ந்த அப்பெண் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்திருப்பதாக முகமட் கைரி கைருடின் தெரிவித்தார்.