
கோத்தா கினாபாலு, ஆகஸ்ட்-30,சபாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட ஒரு பயங்கர தீ விபத்து 3 சிறு குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது.அதோடு, நூற்றுக்கணக்கான மக்களை வீடிழக்கச் செய்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தா கினாபாலுவில் உள்ள நீர்நிலை கிராமங்களில் அதிகாலையில் இந்தத் தீ பரவியது.இதில், Kampung Lok Buta, Kampung Lok Poring, Kampung Sabang Lama ஆகிய 3 கிராமங்களில் இருந்த 200-க்கும் மேற்பட்ட மரவீடுகள் கண் இமைக்கும் நேரத்தில் எரிந்து சாம்பலாகின.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், இடிபாடுகளுக்கு இடையே இருந்து 4, 6 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறு குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கடல் நீரைப் பயன்படுத்தியும், தீ மேற்கொண்டு பரவாமல் இருக்கச் சுற்றியுள்ள வீடுகளை அகற்றியும் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் இந்தத் தீயைக் கட்டுப்படுத்தினர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வரும் அதே வேளையில், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு முதற்கட்ட நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.



