
கோலாலம்பூர், ஆகஸ்ட்-30,மலேசியாவின் Bonsai மர வளர்ப்புத் துறையை ஒரு சாதாரண பொழுதுபோக்கிலிருந்து இலாபகரமான வணிகத் துறையாக மாற்ற முடியும் என, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், Pavilion Bukit Jalil பேரங்காடியில் நடைபெற்ற 10-ஆவது உலகப் பொன்சாய் மாநாடு 2026-ல் உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Bonsai என்பது, வேர்களைக் கட்டுப்படுத்தியும், கிளைகளைச் சீராக வெட்டியும் பெரிய மரங்களைக் குள்ளமாக வளர்க்கும் தொழில்நுட்பமாகும்.
இந்நிலையில், தேசிய நிலப்பரப்புத் துறை பெருந்திட்டத்தின் கீழ், பரந்த நிலப்பரப்புத் துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 40 பில்லியன் ரிங்கிட்டை பங்களிப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
எனினும், உலகளாவிய அளவில் Bonsai மரங்களுக்கு அதிகப்படியான தேவை இருந்தாலும், அதற்கேற்ப விநியோகம் குறைவாகவே உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தத் தேவையைப் பூர்த்திச் செய்ய உள்ளூர் பயிரீட்டாளர்கள் தங்களது ஆர்வத்தை வணிகமாகவும், நிபுணத்துவத்தை நிறுவனமாகவும் மாற்ற வேண்டும் என்றும் ஙா கோர் மிங் கேட்டுக்கொண்டார்.
இந்தத் துறையை ஏற்றுமதிக்குத் தயார்ப்படுத்தும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க மலேசியாவிடம் வளமான பல்லுயிர் பெருக்கம், திறமையான கலைஞர்கள் மற்றும் வளர்ந்து வரும் அனைத்துலக ஆர்வம் போன்ற அத்தியாவசிய அம்சங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



