Latestமலேசியா

சிங்கப்பூர்-சுபாங் இடையிலான புதிய தினசரி விமானச் சேவை; செப்டம்பரில் தொடங்கும் Scoot

சிங்கப்பூர், ஜூலை-19, சிங்கப்பூர்-கோலாலம்பூர் இடையே ஆகாய மார்க்கமாகப் பயணிப்போருக்கு செப்டம்பர் 1-ம் தேதி முதல் மற்றொரு தேர்வு உள்ளது.

Singapore Airlines-சின் கீழ் இயங்கும் மலிவுக் கட்டண விமான நிறுவனமான Scoot, சுபாங் விமான நிலையத்திற்கான தினசரி விமானப் பயணச் சேவையைத் தொடங்குவதே அதற்குக் காரணம்.

அவ்வழித்தடத்திற்கு, தலா 180 இருக்கைகளைக் கொண்ட Airbus A320 விமானங்கள் சேவையில் ஈடுபடும்.

சிங்கப்பூரிலிருந்து ஒரு வழி பயணத்திற்கான சிக்கன வகுப்பு (Economic class) டிக்கெட் கட்டணம் 83 சிங்கப்பூர் டாலரிலிருந்து தொடங்குகிறது.

அதே, சுபாங்கில் இருந்து ஒரு வழிப்பயணத்திற்கு வரியுடன் சேர்த்து 108 ரிங்கிட்டிலிருந்து கட்டணம் தொடங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயண டிக்கெட்டுகளுக்கு ஜூலை 18 முதல் Scoot இணையத்தளத்திலோ அல்லது அதன் கைப்பேசி செயலியிலோ முன்பதிவு செய்யலாம்.

தற்போதைக்கு, செப்டம்பர் முதல் தேதி தொடங்கி சிங்கப்பூர்- சுபாங் இடையிலான விமானம், சாங்கி அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தினமும் காலை 11.55 மணிக்குப் புறப்பட்டு, பிற்பகல் 1.10 மணியளவில் சுபாங்கில் வந்திறங்கும்.

அதே சமயம், சுபாங்கிலிருந்து பிற்பகல் 2.10 மணிக்குப் புறப்பட்டு சிங்கப்பூரில் பிற்பகல் 3.20 மணியளவில் சென்றடையும்.

இப்புதிய தினசரி சேவையானது, கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்குமிடையிலான வசதியான விமானப் பயணங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு மாற்றுத் தேர்வுகளை வழங்கும் நோக்கத்தைக் கொண்டதென Scoot அறிக்கையொன்றில் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!