
சிப்பாங், ஆகஸ்ட்.03-சிப்பாங் மாவட்ட காவல் துறை தலைமையகத்திற்கு அருகேயுள்ள மலைப்பாங்கான பகுதியில், இன்று அதிகாலை சுமார் 2.83 ஹெக்டர் நிலப்பரப்பில் காட்டுத் தீ ஏற்பட்டது.
நீலாயில் இருந்து Bandar Baru Salak Tinggi செல்லும் சாலை அருகே பரவியுள்ள அக்காட்டு தீச் சம்பவம் குறித்து அதிகாலை 1.28 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது. தீ அணைக்கும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதன் நடவடிக்கைப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார்.
தகவல் கிடைத்து, KLIA தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தீயணைப்பு வீரர்கள், சிப்பாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையப் பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்தைச் சென்றடைந்தனர். அப்போது அடர்ந்த வனப் பகுதிக்கு மேலே பிரகாசமான தீச் ஜுவாலைகளும் அடர்த்தியான புகையும் காணப்பட்ட புகைப்படங்களையும் அவர் காட்டினார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், தண்ணீர் லாரி ஆகியவற்றின் உதவியுடன் மொத்தம் 14 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



