
கோலாலம்பூர், செப்டம்பர்-19-சமூகப் பயண பெர்மிட்டில் மலேசியாவுக்கு வந்து, அனுமதியின்றி வேலை செய்பவர்கள் அல்லது சட்டவிரோத வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
குடிநுழைவு இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ Zakaria Shaaban அவ்வாறு எச்சரித்துள்ளார்.
1963-ஆம் ஆண்டு குடிநுழைவு விதிகளின் படி, இந்த அனுமதிப் பெர்மிட் நிபந்தனைகளை மீறியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்றார் அவர்.
தவிர, சட்டத்தை மீறுபவர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும், அவர்களின் சொந்த நாடுகளுக்கே நாடு கடத்தவும் குடிநுழைவு இலாகாவுக்கு முழு அதிகாரமுள்ளது.
சுற்றுலா அல்லது சமூகப் பயண விசாவில் வருபவர்கள் எந்தவிதமான வணிகத்திலோ அல்லது முறையற்ற வேலைகளிலோ ஈடுபடுவது சட்டப்படி முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று அவர் மீண்டும் நினைவுப்படுத்தினார்.



