
கோலாலம்பூர், செப்டம்பர்-19-தேசியக் கோட்பாடான ருக்குன் நெகாராவை கேலி செய்ததாகக் கூறப்படும் நாடக நிகழ்ச்சி தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்பினர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கமான ABIM வலியுறுத்தியுள்ளது.
நாடக ஏற்பாட்டாளர்களும் அதில் சம்பந்தப்பட்டவர்களும் நிகழ்ச்சி குறித்து விளக்கமளித்து, உரியப் பொறுப்பேற்க வேண்டும் என ABIM தலைவர் Fahmi Samsudin கேட்டுக் கொண்டார்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோவில், நடிகர்கள் ஒருவரையொருவர் சீனா, இந்தியா மற்றும் இந்தோனேசியாவுக்குத் “திரும்பிச் செல்லுமாறு” கூறுவதுடன், “இது மலேசியா” எனத் தொடர்ந்து கூறுவதும் இடம் பெற்றுள்ளது.
மேலும், நடிகர்கள் ருக்குன் நெகாராவின் கோட்பாடுகளை வாசிக்கும் போது, ஒவ்வொரு கோட்பாட்டுக்குப் பின்னரும் சில கருத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
கலைச் சுதந்திரத்தை ABIM மதிப்பதாகக் கூறிய Fahmi, அதே சமயம் படைப்புச் சுதந்திரம் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.
ருக்குன் நெகாராவைச் சமூகம் பின்பற்றத் தவறுவதை விமர்சிப்பதற்கும், அந்த தேசியக் கோட்பாடுகளையே கேலிக்குரியதாக மாற்றுவதற்கும் வேறுபாடு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ABIM கேட்டுக் கொண்டுள்ளது.



