
சிரம்பான், தாமான் ஜெயாமாஸில் உள்ள ஒரு வீட்டொன்றின் கான்கிரீட் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் பலத்த சேதமடைந்தன.
இன்று அதிகாலை 3 மணியளவில் தகவல் அறிந்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், Toyota Vios, Perodua Viva, Proton Persona ஆகியக் கார்களின் மீது காங்கிரீட் விழுந்ததை உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தின் போது கார்களுக்குள் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ அல்லது காயங்களோ எதுவுமின்றிப் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இவ்வேளையின் அவ்வீட்டின் உரிமையாளரான 43 வயது V. தியாகராஜன், அதிகாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது வெளியில் பெரும் சத்தம் கேட்டு திடுக்கிட்டதாகக் கூறினார்.
அங்கே, இன்னும் 2 வாரங்களில் கட்டுமானம் பூர்த்தியாகவிருந்த தனது வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்திருப்பதைக் கண்டு அவர் அதிர்ந்துபோனார்..
இதனால், அண்டை வீட்டாரின் கார்கள் சேதமடைந்திருப்பது தமக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறிய அவர், குத்தகைக்காரரிடம் அது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீஸிலும் புகார் செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார்.
சேதமடைந்தக் கார்களின் சொந்தக் காரர்களான அண்டை வீட்டுக் காரர்களும், நடந்தது குறித்து அதிர்ச்சித் தெரிவித்தனர்.



