
டுங்குன், மே-11-தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் தனது ஐந்து வயது வளர்ப்பு மகனின் விரலை லைட்டரால் சூடு வைத்தது, கழுத்தை நெரித்து, வயிற்றின் மீது மிதித்து துன்புறுத்தியதாகக் கூறப்படும் ஓர் ஆடவனை போலீசார் கைது செய்தனர்.
சிறுவனின் தாய் நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து, 36 வயதான அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக டுங்குன் போலீஸ் நிலையத்தின் இடைக்கால போலீஸ் தலைவர் துணை Superintendent ஜூமைடி பா ( Jumaidi Bah) தெரிவித்தார்.
கடந்த வாரம் தனது மகனின் மோதிர விரலில் தீக்காயத் தழும்புகளைத் தாய் கவனித்த பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
காயம் குறித்து தனது தாயார் சிறுவனிடம் வினவியபோது , தவறாக நடந்துகொண்டதற்காகத் தண்டனையாகத் தனது வளர்ப்புத் தந்தை லைட்டரால் விரலைச் சுட்டதாக அவன் கூறியுள்ளான்.
பின்னர், சந்தேக நபரின் மனைவி இதுகுறித்து விசாரித்தபோது, அந்த ஆடவன் தனது செயலை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது.
அந்தச் சம்பவங்களுக்குச் சாட்சிகள் யாரும் இல்லாதபோதிலும், சந்தேக நபர் இதற்கு முன்பும் தனது வயிற்றின் மீது மிதித்ததோடு , கழுத்தை நெரித்தததையும் சிறுவன் தனது சகோதரியிடம் கூறியதாகவும் அவனது தாய் தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேகப் பேர்வழி இன்று முதல் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.



