
கோலாலம்பூர், ஜூன் 17 – செராஸின் ஜாலான் லோக் யூவில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் முன்புறம் சந்தேக நபர்களால் இரண்டு ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இன்று அதிகாலை மணி 12.15 அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் வணிக வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது காருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவ்விருவரும் சுடப்பட்டதாக கூறப்பட்டது. தலைக்கவசம் அணிந்த ஒரு கும்பல் திடீரென
வர்த்தக வளாகத்திற்கு வெளியே இருந்த இருவரை நோக்கி ஓடியதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மீது பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாக கூறப்பட்டது. துப்பாக்கி வைத்திருந்த ஆடவர் கும்பல் புரோடுவா Alza காரில் தப்பிச் சென்றனர். உடல் மற்றும் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளான இருவர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்தனர். தங்களது வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து ஐந்து மீட்டர் தூரத்தில் துப்பாக்கிச் சூட்டு காயத்திற்கு உள்ளான இருவரும் கீழே விழுந்து கிடந்ததனர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த கோலாலம்பூர் குற்றப் புலனாய்வுத்துறை மற்றும் செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் தடயயியல் பிரிவின் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். மரணம் அடைந்த அந்த இரண்டு நபர்களும் 40 வயது மதிக்கத்தக்கவர்கள் என்பதோடு அவர்கள் சரவா சிபுவைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது.