
சிங்கப்பூர், மே 29 – ஜோகூர்-சிங்கப்பூர் தரைவழி எல்லைகளைப் பயன்படுத்தும் பயணிகள், அடுத்த மாதம் முழுவதும் உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், காத்திருப்பு நேரம் பல மணிநேரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாக தின நீண்ட வார இறுதி மற்றும் ஜூன் மாதப் பள்ளி விடுமுறைகள் காரணமாக, ஜூன் 28 ஆம்தேதிவரை இரு சோதனைச் சாவடிகளிலும் போக்குவரத்து மிகவும் அதிகமாக இருக்கும் என சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையமான (ICA) தெரிவித்துள்ளது.
அண்மைய விடுமுறைக் காலத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் இந்த சோதனைச் சாவடிகளைக் கடந்ததைத் தொடர்ந்து இந்த ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம்தேதியன்று போக்குவரத்து உச்சத்தை எட்டியதாகவும், அன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 580,000 பயணிகள் இரு சோதனைச் சாவடிகளையும் கடந்து சென்றதாகவும் ICA சுட்டிக்காட்டியது.
அதிகரித்த போக்குவரத்து நேரங்களில், வாகன ஓட்டிகள் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக மூன்று மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக, அதிகரித்துள்ள உலகளாவிய பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அதிகாரிகள் பிப்ரவரி 28 முதல் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்புச் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.



