கோலாலம்பூர், ஜூலை 2- இன்று காலை முதல் சுற்றுலா பஸ்கள் மற்றும் விரைவு பஸ்களுக்கு எதிராக சாலை போக்குவரத்துத்துறை தொடங்கிய ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இரண்டு சுற்றுலா பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு போதைப் பொருள் பயன்படுத்திய பஸ் ஓட்டுனர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கோம்பாக் சாலை போக்குவரத்து அமலாக்கத்துறையின் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 22 பஸ்கள் மீது பரிசோதனை நடத்தப்பட்டதாக சாலை போக்குவரத்துத் துறையின் சட்ட அமலாக்க பிரிவின் மூத்த இயக்குநர் முகமட் கிப்லி மா ஹசான் ( Muhammad Kifli Ma Hassan ) தெரிவித்தார்.
மேலும் இரண்டு சுற்றுலா பஸ்களை லைசென்ஸ் இல்லாமலும் பொது சேவை வாகன தொழிற்நுட்ப லைசென்ஸ் இல்லாத தனிப்பட்ட நபர்கள் ஓட்டிச்சென்றதையும் தாங்கள் கண்டறிந்ததாக அவர் தெரிவித்தார். இதனை சாலை போக்குவரத்துத் துறை கடுமையாக கருதுவதால் சுற்றுலா மற்றும் விரைவு பஸ் நடத்துனர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்படும் என முகமட் கிப்லி கூறினார். பயணிகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம் என்பதால் லைசென்ஸ் இன்றி மற்றும் இதர குற்றங்களில் ஈடுபடும் பஸ் ஓட்டுனர்கள் விவகாரத்தில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லையென முகமட் கிப்லி கூறினார்.