
ஜோர்ஜ்டவுன், ஜூலை 3 – ஜோர்ஜ்டவுன், பத்து கந்தோங் (Jalan Batu Gantung) பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகக் கருதப்படும் பெரிய மரம் வேரோடு சாய்ந்து இரண்டு வீடுகள் மீது விழுந்ததில், முதியவர் ஒருவர் வீட்டுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில், இரண்டு வீடுகளின் கூரை, நுழைவாயில், கார் நிறுத்துமிடம் மற்றும் மூன்று கார்கள் சேதமடைந்தன. அதே நேரத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட முதியவரின் மனைவி, தினமும் மாலை தானும் தனது கணவரும் வீட்டுத் தோட்டத்தில் அமர்வது வழக்கம் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், சம்பவம் நடந்தபோது தான் வெளியே சென்றிருந்ததால், அவரது கணவர் மட்டும் வீட்டுக்குள் இருந்துள்ளார். இதனால் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக அவர் மேலும் கூறினார்.
இந்த மரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கி, ஆபத்தான மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



