
கோலாலம்பூர் – ஜூன் 13 – கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைத் திட்டத்திற்காகச் Sukuk நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் டான்ஸ்ரீ ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு உதவ ஊழல் தடுப்பு தந்திர வியூகப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் பணியில் ஈடுபட்டதற்கு , அவரது வீட்டில் ஒரு ரகசிய அறையில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகம் எழுந்ததே காரணம் என கூறப்பட்டது. நேற்று செராஸ் பண்டார் தாசேக் செலத்தானில் உள்ள அந்த நபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC இதனை தெளிவுபடுத்தியது. தற்போது நடைபெற்றுவரும் விசாரணை தொடர்பான ஆயுதங்களும் விலையூர்ந்த பொருட்களும் அந்த வீட்டிலுள்ள ரகசிய அறையில் இருப்பதாக MACC யின் முக்கிய தொடர்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கைப்பற்றப்பட்ட பொருட்களை புத்ராஜெயாவில் உள்ள MACC தலைமையகத்திற்கு கொண்டுச் செல்வதற்கும் MACC யின் ACTS குழுவினர் அந்த டான்ஸ்ரீ பிரமுகரின் வீட்டிற்கு அழைக்கப்பட்டனர். இந்த சோதனையில் சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 84 சொகுசு கைப்பைகள், சுமார் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 11 பிராண்டட் கைக்கடிகாரங்கள், 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள தங்கக் கட்டிகள், நாணயங்கள் மற்றும் சிலைகள் மற்றும் 4 மில்லியன் ரிங்கிட் மதிப்பிடப்பட்ட வைரங்கள் மற்றும் நகைகள் ஆகியவையும் அடங்கும்.
மேலும் 150,000 ரிங்கிட் மதிப்புள்ள சொகுசு கேசினோ விளையாட்டு உபகரணங்களின் தொகுப்பும் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு குண்டு துளைக்காத ரகசிய அறையையும் MACC கண்டுபிடித்தது, ஆனால் ஆயுதங்கள் அந்த நபருக்குச் சொந்தமான ஒரு பாதுகாப்பு நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதால் அவை பறிமுதல் செய்யப்படவில்லை என MACC வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மொத்த மதிப்பு சுமார் 16 மில்லியன் ரிங்கிட் என்பதை MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.