
கோலாலம்பூர், ஆகஸ்ட்.20- நாட்டின் புகழ்பெற்ற தஞ்சை கமலா இந்திரா நடனப் பள்ளியின் 60-வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு, “KRISHNAYANAM: FROM BIRTH TO BEYOND” என்ற பிரம்மாண்ட நாட்டிய நாடகம் அரங்கேறவிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு HGH Convention Centre-ல் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சி, தஞ்சை கமலா இந்திரா நடனப் பள்ளியின் ஆறு தசாப்த கலைப் பயணத்தை கொண்டாடும் சிறப்பு படைப்பாக அமையவுள்ளது. இந்நாட்டிய நாடகத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் உருவாக்கப் பின்னணி குறித்து பள்ளியின் தோற்றுநர் இந்திரா மாணிக்கம் விவரித்தார்.
கடந்த ஆறு தசாப்தங்களாக நாட்டின் முன்னோடி பரதநாட்டியப் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் தஞ்சை கமலா இந்திரா நடனப் பள்ளி, மலேசியாவில் மிக நீண்ட காலமாக இயங்கி வரும் நடனப் பயிற்சிப் பள்ளி என்ற Malaysia Book of Records அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
பிரம்மாண்டமான கருப்பொருள் சார்ந்த நடன-நாடகங்களை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற இப்பள்ளி, கலைத்திறன், புதுமை மற்றும் வலிமையான கலாச்சாரக் கதைசொல்லல் ஆகியவற்றின் மூலம் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
அந்த வரிசையில் புதிய படைப்பாக அரங்கேறும் “KRISHNAYANAM: FROM BIRTH TO BEYOND”, பகவான் கிருஷ்ணரின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தை பரதநாட்டியத்தின் வழியே கண்முன் கொண்டு வரவிருக்கிறது.
அதிசயமான பிறப்பிலிருந்து, தர்மத்தைக் காப்பவர், சிறந்த வியூகவாதி, கருணைமிக்க நண்பர் மற்றும் மனிதகுலத்திற்கு வழிகாட்டிய தெய்வீக ஆசிரியர் என கிருஷ்ணரின் பல்வேறு பரிமாணங்களையும் இந்த நாட்டிய நாடகம் எடுத்துரைக்கவுள்ளது.
பரதநாட்டியத்தின் அழகு, நளினம், வலிமை மற்றும் பிரம்மாண்டத்துடன், காலத்தால் அழியாத கிருஷ்ணரின் திருக்கதையை உயிரோட்டமாக மேடையில் காணும் அனுபவமாக KRISHNAYANAM அமையவிருக்கிறது.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை திரையில் காணும் இணைப்பின் வழியாக வாங்கலாம்.
ஆகஸ்ட் 22 — இரவு 7.30 மணி — HGH Convention Centre.
கிருஷ்ணரின் வாழ்க்கைக் காவியத்தை நாட்டியத்தின் வழியே நேரில் கண்டு மகிழுங்கள்.



